Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்துக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த போராட்டம்

18-1. 1968 தொடங்கி 1975 வரை உலகின் அநேகப் பகுதிகளை உலுக்கிய சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு அலை தோற்றம் எடுத்தபோதுதான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதமும் நடந்தது. பிரான்சில் கொந்தளிப்பான மே-ஜூன் வேலை நிறுத்த இயக்கத்தையும் 1968ல் செக்கோஸ்லாவக்கியாவில் “பிராக் வசந்தகாலத்தையும்” தொடர்ந்து, 1969ல் இத்தாலியில் நடந்த “உஷ்ண கோடை” காலப் போராட்டங்கள், 1974ல் ஹீத் அரசாங்கத்தை கவிழ்த்த பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களது வேலை நிறுத்தம் மற்றும் போர்ச்சுக்கல் மற்றும் கிரேக்கத்தில் பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சி உட்பட அடுத்தடுத்த எழுச்சிகள் இடம்பெற்றன. யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதாரச் செழிப்பு மற்றும் 1971 ஆகஸ்டில் அமெரிக்க டாலருக்குத் தங்கத்தை மாற்றிக் கொள்ளும் முறை முடிவுக்கு வந்த நிலையால் சமிக்ஞையளிக்கப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் நாணய முறைமையின் தகர்வு ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொந்தளிப்பின் விளைபொருளாக இந்தப் போராட்டங்கள் அமைந்திருந்தன. இத்தகைய புரட்சிகர இயக்கங்களை காட்டிக்கொடுப்பதில் சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பிரதான பாத்திரம் ஆற்றினர், எவ்வாறெனினும், 1964ல் லங்கா சம சமாஜக் கட்சியின் முந்திய காட்டிக்கொடுப்பில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முடிவெடுத்ததைப் போல், தொழிலாள வர்க்கம் அதன் பழைய கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் துரோகத்துக்கு எதிராக மேற்கொள்கின்ற அரசியல் போராட்டங்களைத் தடுப்பதில் முதலாளித்துவத்தின் இன்றியமையாத இரண்டாம் நிலை முட்டுத்தூணாக பல்வேறு பப்லோவாத அமைப்புக்களும் நிரூபணமாயின.

18-2. இலங்கையில் முதலாளித்துவ வர்க்கம் லங்கா சம சமாஜக் கட்சியையே நேரடியாகச் சார்ந்திருந்தது. 1970 மே மாதம் பெரும் தேர்தல் வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்து, 1977 இல் இழிவான முறையில் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சியில் இருந்த இரண்டாவது சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு அவசியமாகியிருந்த “ட்ரொட்ஸ்கிச” மூடு திரையை லங்கா சம சமாஜக் கட்சியே வழங்கியது. லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர்களான என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, லெஸ்லி குணவர்த்தனா ஆகிய அனைவரும் அமைச்சர்களானார்கள். இந்தக் காலகட்டம் முழுவதும், உலகம் பூராவும் உள்ள தமது பப்லோவாத சமதரப்பினரைப் பின்பற்றி, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளும், பல்வேறு வேடங்களில், ஐக்கிய இடது முன்னணியை புதுப்பிப்பதையும் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைக் காக்க லங்கா சம சமாஜக் கட்சியையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் நெருக்க முடியும் என்ற மாயையையும் ஊக்குவிப்பதன் மூலம், பெருகி வந்த தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதில் உதவி செய்தன.

18-3. முன்னைய யூ.என்.பி. அரசாங்கத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எதிர்ப்பு கரைபுரண்டோடிய நிலையில், 1970 தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கு விமர்சனத்துடன் வாக்களிக்குமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. இந்த முக்கியமான தந்திரோபாய தவறைப் பற்றி மைக்கல் பண்டா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டினார். இந்தக் கொள்கை “சீர்திருத்தவாதிகளுக்கும் மற்றும் தீவிரவாத முதலாளித்துவத்துக்கும் ஒரு அனுமதிக்க முடியாத சலுகையாகும்” என அவர் விளக்கினார். “நிச்சயமாக, இப்போதைய பணி இன்னுமொரு கூட்டணிக்கு கதவைத் திறந்துவிடுவதாக இருக்கக் கூடாது (எங்களுக்கு இன்னும் எத்தனை கூட்டணிகள் தேவை!). மாறாக, ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு எந்தவொரு ஆதரவும் கொடுப்பதை மறுத்து, ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வெளியேறுமாறு கோருவதன் மூலம், முதலாளித்துவப் பொறியில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிக்க முயற்சிப்பதே இப்போதைய பணியாக இருக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

18-4. கீர்த்தி பாலசூரியாவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அளித்த பதிலிறுப்பு, ஒரு மார்க்சிசக் கட்சி ஒரு கோட்பாடுடனான திருத்தத்தை எவ்வாறு செய்கின்றது என்பதற்கு ஒரு உன்னதமான உதாரணத்தை வழங்கியது. பண்டாவின் கடிதம் குறித்தும் தவறின் அரசியல் தாக்கங்கள் பற்றியும் ஒரு பூரணமான உட்கட்சி கலந்துரையாடலுக்கு கட்சித் தலைமை முதலில் ஏற்பாடு செய்தது. தவறை திருத்தி 1970 ஜூலையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியதாவது: “ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிரான எதிர்ப்பில் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்துக்கான ஒரு முன்னோக்கின் அடிப்படையில், ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் கூட்டணி முன்னோக்குக்கு எதிரான ஒரு போராட்டம் இன்றி, நம்மால் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட முடியாது. சம சமாஜிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிச தலைவர்களை கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் கூட்டணி அமைப்பில் இருந்தும் வெளியேறுமாறு நெருக்குவதானது, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்துக்கான போராட்டம் எடுக்கின்ற ஒரு வடிவமாகும்.”

18-5. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் புதிய தந்திரோபாய நோக்குநிலை, ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான போலி நம்பிக்கைகளை ஊக்குவிப்பதல்ல. மாறாக, அது ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதன் பாகமாக, ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க ஒத்துழைப்பு அரசியலை அம்பலப்படுத்துவதாகும். நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத் திட்டம் தெரிவிப்பது போல்: “தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் பேரில் பேசிவரும் சகல கட்சிகளையும் அமைப்புக்களையும் நாம் முதலாளி வர்க்கத்தில் இருந்து அரசியல் ரீதியில் பிரிந்து, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கான போராட்டப் பாதையில் காலடி எடுத்து வைக்குமாறு அழைக்கின்றோம். இந்தப் பாதையில் நாம் முதலாளித்துவ பிற்போக்குக்கு எதிராக, அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வாக்குறுதியளிக்கின்றோம். அதே சமயம், நாம் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் வேலைத் திட்டமாக அமைய வேண்டுமெனக் கருதும் இடைமருவு கோரிக்கைகளைச் சூழ நமது போராட்டத்தினை சளைக்காமல் அபிவிருத்தி செய்வோம்.”[42]

18-6. எவ்வாறெனினும், அந்த உடனடி தவறை திருத்துவதுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நின்றுவிடவில்லை. ஒரு மார்க்சிஸ்ட் என்ற வகையில், குறிப்பாக குட்டி முதலாளித்துவ தீவிரவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் முகவர்களின் ஊடாக, கட்சியின் மீது திணிக்கப்படும் கணிசமான அரசியல் அழுத்தங்களின் விளைவே இந்த தவறு என பாலசூரியா புரிந்துகொண்டார். “புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீது தாக்கம் செய்த இதே எதிரி வர்க்க அழுத்தம், இன்னுமொரு வடிவில் வேறொரு சூழ்நிலைகளில் தோன்ற முடியும் என்பதால், இதன் வேர்களை”ப் புரிந்துகொள்வது அத்தியாவசியமானது என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கை பிரகடனம் செய்தது. இந்தக் கலந்துரையாடல்கள் தோன்றிய உடனேயே, பாலசூரியா, நடுத்தர வர்க்க தீவிரவாதத்தின் உருவமாக இருந்த ஜே.வி.பி. பற்றி ஒரு நூலளவு ஆய்வை மேற்கொண்டார். பப்லோவாதிகளாலும் முன்னிலைப்படுத்தப்பட்ட காஸ்ட்ரோவாதத்தின் விவசாய கெரில்லாவாதம் மற்றும் மாவோவாதம் ஆகிய அந்நாளின் கவர்ச்சிகரமான தத்துவங்களில் இருந்து ஜே.வி.பி.யின் வேலைத்திட்டம் வரையப்பட்டிருந்தது. ஜே.வி.பி.யை விமர்சனபூர்வமாக ஆய்வுக்குட்படுத்திய பாலசூரியா, தீவிர சிங்கள ஜனரஞ்சகவாதம் மற்றும் அதற்கு அடிபணிந்திருந்த ல.ச.ச.க. மற்றும் புரட்சிகர ல.ச.ச.க. உட்பட சகல கட்சிகளில் இருந்தும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வர்க்க வேறுபாட்டை ஆழப்படுத்தினார்.

18-7. தனது நூலின் முன்னுரையில் பாலசூரியா தெரிவித்ததாவது: “மாவோ சேதுங் மற்றும் சீனப் புரட்சியின் அனுபவங்களில் தாம் காலூன்றியிருப்பதாக கூறிக்கொள்ளும் பல சக்திகள், புரட்சி பற்றிய பிரச்சினையை, வெறுமனே ஏதாவதொரு வழியில் ஒரு நீண்ட ‘மக்கள் யுத்தத்தை’ அல்லது வேறொரு வடிவிலான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒன்றாக தரம் குறைக்க முயற்சிக்கின்றன. இத்தகைய முயற்சிகளுக்கும் புரட்சி பற்றிய மார்க்சிச நிலைப்பாடுகளுக்கும் பொதுவான எதுவும் கிடையாது. வர்க்கங்களுக்கும் அதன் இயக்கவியலுக்கும் இடையிலான உள்-உறவுகளை உண்மையாக புறநிலையில் மதிப்பீடு செய்யாமல் புரட்சி பற்றிய பிரச்சினையை எழுப்பக்கூட முடியாது... தொழிலாள வர்க்கத்தால் அமைதியான வழிமுறையில் ஆட்சிக்கு வரமுடியாது என வலியுறுத்தும் மார்க்சிசக் கருத்துக்கும், ஆயுதங்களைக் கையில் எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதிப்படுத்தி விட முடியும் என்ற மதிகெட்ட சூத்திரத்துக்கும் இடையில் பொதுவான எதுவும் கிடையாது. தொழிலாள வர்க்கத்தின் கையில் ஆயுதங்கள் இருந்தும் கூட, முதலாளித்துவத்தால் தாக்கப்பட்டு நசுக்கப்பட்ட புரட்சியின் அனுபவங்களை கொஞ்சமேனும் மதிக்கும் எவரும், அத்தகைய நிலைப்பாடுகளை பரிந்துரை செய்யமாட்டார்கள்.”[43]

18-8. பாலசூரியா விளக்கியவாறு, காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் மாவோ போல் ஜே.வி.பி.யும் இயல்பிலேயே தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமானது என்பதோடு அது பிற்போக்கு தேசியவாதத்தில் வேரூன்றியிருக்கிறது. ஜே.வி.பி.யின் திரிபுபடுத்தப்பட்ட சொற்பதங்களில், “பாட்டாளி வர்க்கம்” என்பது விவசாயிகளின் ஒடுக்கப்பட்ட தட்டினராகக் காட்டப்படுகிறது. இந்த அமைப்பு, தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை, “கஞ்சிக் கோப்பைக்கான போராட்டங்கள்” என்று சிறுமைப்படுத்தியது, அது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான “தேசப்பற்று” போராட்டத்திலிருந்து கவனத்தை திருப்பியது என்றது. தம்மை காஸ்ட்ரோ முறையில் வடிவமைத்துக்கொண்டுள்ள ஜே.வி.பீ., “தேசப்பற்றுள்ளவர்களின் ஒரு குழுவினால் அரங்கேற்றப்படும் ஒரு எழுச்சியினால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை வலுவற்றதாக்க முடியும்” எனப் பிரகடனம் செய்தது. ஸ்ராலினிஸ்ட்டுகளைப் போலவே, ஜே.வி.பி.யும் தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்குப் பண்பை பற்றிய ஆபத்தான மாயைகளை ஊக்குவிக்கின்றது. 1925-27 சீனப் புரட்சிக்கான ஸ்ராலினின் சூத்திரத்தை மீண்டும் கூறுவதற்கு நிகராய், “சகல சமூக வர்க்கங்கள் மத்தியிலான ஏகாதிபத்திய-விரோத வெறுப்பு”, “ஒன்றாய் குவிக்கப்பட்டு” அது “தேசப்பற்றுக்கு சமமானதாகிறது” எனப் பிரகடனம் செய்கின்றது.

18-9. ஆரம்பத்தில் இருந்தே, ஜே.வி.பி.யின் பிரச்சாரம் இனவாத பண்பைக் கொண்டிருந்தது: தேசப்பற்று என்பது சிங்கள தேசப்பற்றை அர்த்தப்படுத்தியது; ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டம் “இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு” எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியிருந்ததோடு, “சலுகை கொண்ட” தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்களின் எதிரிகளாக பிரகடனப்படுத்தப்பட்டனர். பாலசூரியா தீர்க்கதரிசனமாக எச்சரித்ததாவது: “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இலங்கை முதலாளித்துவமும் தமது சொந்த வர்க்க நலன்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை அழிக்க தூண்டப்படும் ஒரு காலகட்டத்தில், அதே தொழிலாளர்களுக்கு எதிரான குட்டி முதலாளித்துவ பகைமை என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் கைகளில் ஒரு ஆயுதமாக மாறும். பாசிசத்துக்கு வழிவகுக்கும் இனவாதத்தில் இதுவும் ஒன்று. ஜே.வி.பி. இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஒரு இயக்கத்தை உருவாக்குகின்றது. இது எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் நன்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” இந்த புத்தகம் பிரசுரிக்கப்பட்டதற்குப் பதிலிறுத்த ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீரா, ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் பாலசூரியா தூக்கிலிடப்படுவார் என எச்சரித்தார்.

18-10. தனது தந்திரோபாய தவறை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொள்கைரீதியில் திருத்தியமை, அடுத்து வரவிருந்த பிரமாண்டமான அரசியல் சோதனைகளுக்கான அத்தியாவசியமான தயாரிப்பாக இருந்தது. சில மாதங்களுக்குள், “தேசப்பற்றாளர்கள் குழுவொன்று அரங்கேற்றும் கிளர்ச்சியினால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை கீழறுக்க முடியும்” என்ற தனது தத்துவத்தை ஜே.வி.பி. நடைமுறைப்படுத்தியது. 1971 ஏப்பிரலில், தீவின் தென்பகுதியில் இருந்த பொலிஸ் நிலையங்கள் மீது ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களை அதன் உறுப்பினர்கள் முன்னெடுத்தனர். ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவுடன் பதிலிறுத்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம், கொடூரமான அரச ஒடுக்குமுறையை முன்னெடுத்தது. 15,000க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் இராணுவம் மற்றும் பொலிசாரால் கொல்லப்பட்டதோடு 30,000க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டதோடு ஜே.வி.பி. தலைவர்களை சதித்திட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்க புதிய கொடூரமான சட்டம் நிறைவேற்றப்பட்டது.

18-11. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வந்துசேர்ந்த அந்தக் காலகட்டம் அதற்கு ஒரு அக்கினிப் பரிட்சையாகியது. ஜே.வி.பி. உடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டுள்ள அடிப்படை அரசியல் வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க, ஜே.வி.பி. மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான கொலைகார அரச ஒடுக்குமுறை பிரச்சாரத்தை எதிர்ப்பதில் அது ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்தது. இதன் விளைவாக, அரசாங்கம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பிரசுரங்களை தடை செய்ததோடு கட்சி தலைமறைவாக செயற்படத் தள்ளப்பட்டது. அது அவசரகாலச் சட்டங்களையும் மீறி தனது அரசியல் வேலைகளைத் தொடர்ந்ததோடு பயங்கரமான இழப்புக்களையும் சந்தித்தது. மத்திய குழு உறுப்பினர் லக்ஸ்மன் வீரக்கோன் மற்றும் எல்.ஜி. குணதாசா ஆகிய இரு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருக்கும் போது கொல்லப்பட்டனர்.

18-12. ஆயினும், வேதனை மிக்க அனுபவங்களால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழிந்துவிடவில்லை. மாறாக அதன் அரசியல் புகழ் குறிப்பிடத்தக்களவு பரவியது. தடை செய்யப்பட்டிருந்த நிலைமையிலும், அது அரச ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயற்சித்தது. கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தடுத்துவைக்கப்பட்டிருந்த கிராமப்புற இளைஞர்களைப் பாதுகாக்க தீவு பூராவும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் நின்று, முதலாளித்துவ அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் ஒரு கூட்டை அமைத்துக்கொள்ளும் நடவடிக்கையின் பாகமாக, கிராமப்புற வெகுஜனங்களை பாதுகாக்கும் அரசியல் பொறுப்பு தொழிலாள வர்க்கத்துக்கு உண்டு, என கட்சி விளக்கியது. கிராமப்புற இளைஞர்கள் மீதான தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் முன்னறிவிக்கின்றன என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எச்சரித்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த “அரசியல் கைதிகளை விடுதலை செய்” என்ற கோரிக்கை, 1970களின் நடுப்பகுதியில் அபிவிருத்தி கண்ட வேலை நிறுத்த இயக்கத்தில் தொழிலாளர்களின் சுலோகங்களில் ஒன்றாக மாறியது. ஜே.வி.பி. தலைவர் விஜேவீர 1978ல் விடுதலை செய்யப்பட்ட பின்னர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பிரச்சாரத்துக்கு நன்றி தெரிவிக்க கட்சியின் தலைமையகத்துக்கு வருகைதந்தார்.

18-13. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பாதுகாப்புப் பிரச்சாரத்தின் ஒரு அம்சம் விசேடமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். ஜே.வி.பி.யின் எழுச்சியைத் தொடர்ந்து அவசரகால அதிகாரங்களின் கீழ் அச்சுறுத்தலுக்கு உள்ளான கலைஞர்களின் ஜனநாயக உரிமையை காக்க கட்சி தீவிரமாக தலையீடு செய்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பிரச்சாரமும் புதிய நாடகம், சினிமா மற்றும் இலக்கியங்கள் பற்றிய அதன் திறனாய்வுகள் பிரசுரிக்கப்பட்டமையும் விசேடமாக இளைஞர்கள் மத்தியில் பரந்த வாசகர்களை ஈர்த்தது. ட்ரொட்ஸ்கி எழுதிய “கலாச்சரமும் சோசலிசமும்” என்ற சிறிய முக்கிய பிரசுரத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மொழிபெயர்த்ததோடு, கலை பற்றிய மார்க்சிச அணுகுமுறையை விரிவுபடுத்தியமை, செல்வாக்கான முதலாளித்துவ கருத்தியல்களையும், அதே போல் ஸ்ராலினிச “சமூக யதார்த்தத்தை” அடிப்படையாகக் கொண்ட தத்துவத்தையும் கிழித்தெறிந்தது. 1985ல் முன்னணி கல்விமானாகிய பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர, கட்சியின் வேலைகள் மீது பகிரங்கமாக தாக்குதல் தொடுக்கத் தள்ளப்படுமளவுக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எழுத்துக்கள் செல்வாக்கு செலுத்தியிருந்தன. அதற்கு பதிலிறுப்பாக, கீர்த்தி பாலசூரியா, அப்போதைய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்த சுச்சரித்த கம்லத்துடன் சேர்ந்து, ஒரு நூலை எழுதினார். அந்த பதில், மார்க்சிச இலக்கிய விமர்சனத்தின் வரலாற்றுச் சடவாத அடித்தளங்களை விளக்கியது. இந்த தத்துவார்த்த அபிவிருத்திகளுக்கு பியசீலி விஜேகுணசிங்கா கட்சிப் பிரசுரத்துக்கு எழுதிய பல திறனாய்வுகள் மற்றும் மூன்று நூல்களின் ஊடாக பங்களிப்பு செய்தார், அவற்றில் கடைசி நூல், 1989ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்து வெளியேறிய பேராசிரியர் கம்லத்துக்கு எதிராக எழுதப்பட்டது, கம்லத் கட்சியையும் மார்க்சிசத்தையும் கசப்புடன் தாக்கினார்.

18-14. ஏப்பிரல் 1971 கிளர்ச்சிக் காலமும் அதை அடுத்துவந்த காலமும் கட்சிக்குள் கணிசமான அரசியல் சிரமங்களை உருவாக்கிவிட்டன. பாலசூரியாவை ட்ரொட்ஸ்கிசத்துக்கு வென்றெடுக்க உதவிய அனுர ஏக்கநாயக்கா உட்பட பல முன்னணி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறினர். முன்னைய தந்திரோபாய தவறு சம்பந்தமாக எவ்வாறு செயற்பட்டாரோ அவ்வாறே பாலசூரியா இந்த நெருக்கடி சம்பந்தமாகவும் செயற்பட்டு அதன் அரசியல் வேர்களை தெளிவுபடுத்த முயற்சித்தார். ஏக்கநாயக்காவும் ஏனையவர்களும் கட்சியை விட்டோடியதை புரிந்துகொள்வதன் பேரில், அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு மற்றும் அதை ஸ்தாபித்த பல்வேறு தட்டினரையும் பற்றி, பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஆழமாக ஆராய்வதன் பக்கம் திரும்பினார். ஜே.வி.பி. பற்றிய அவரது முன்னைய ஆய்வுகளைப் போலவே, இந்த உட்கட்சி வரலாறும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மத்தியதர வர்க்க தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களில் இருந்தும் பிரிவதை ஆழமாக்கியது.

18-15. பாலசூரியா 1972ல் பிரிட்டனுக்கு சென்றிருந்த போது, “ஏப்பிரல் நெருக்கடியும் கட்சியின் வரலாறும்” என்ற ஆவணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பொன்றை பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர் ஜெரி ஹீலியிடம் கொடுத்து அவரது கருத்தைக் கோரினார். எவ்வாறெனினும், 1972 அளவில் சோசலிச தொழிலாளர் கழகம் பப்லோவாதத்துக்கு எதிரான தனது முன்னைய போராட்டத்தை கைவிடும் நிலையில் இருந்தது. ஒரு 23 வயது ட்ரொட்ஸ்கிசத் தலைவருக்கு உகந்த ஆலோசனைகளை வழங்குவது தான் கடந்த காலத்தில் நடந்திருக்கும். ஆனால் இப்போதோ அந்த ஆவணத்தை நிராகரித்த ஹீலி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு ஒரு முன்னோக்குத்தான் தேவை வரலாறு அல்ல எனத் தெரிவித்தார். பிரிட்டனில் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், இவ்வாறு தவறாக முன்னோக்குக்கு எதிராய் வரலாற்றை நிறுத்துவதை எதிர்த்து பாலசூரியா பதிலளித்தார்: “இந்த ஆவணம் ஒரு முன்னோக்கு ஆவணத்துக்கு மாற்றீடானது அல்ல. மாறாக அதற்கான ஒரு முன்நிபந்தனையாகும். நாங்கள் ஒரு முன்னோக்கு ஆவணத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதை மொழிபெயர்ப்பு முடிந்த உடனேயே உங்களுக்கு அனுப்புவோம். ஆனால், ஒரு முன்னோக்கு ஆவணத்தை வரைவதற்கு, நாம் முதலில் தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால போராட்டங்களுக்கும் மார்க்சிச இயக்கத்துக்குமான எமது உறவைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உறவை வரையறுப்பதும் புரிந்துகொள்வதும் இல்லாமல், எதிர்வரும் வர்க்க மோதல்களில் நாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தைப் புரிந்துகொள்வது சாத்தியமற்றதாக இருக்கும். இதில்தான் வரலாற்றின் முக்கியத்துவம் உள்ளது.”[44]

18-16. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமையின் வளர்ச்சியடைந்துவரும் அரசியல் பக்குவத்தின் ஒரு அறிகுறியாக, ஹீலியின் கருத்துக்களை அலட்சியம் செய்த பாலசூரியா, கட்சியின் வரலாறு மற்றும் முன்னோக்கு சம்பந்தமாக இரு ஆவணங்களை 1972ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மாநாட்டில் முன்வைத்தார். அடுத்த நான்கு ஆண்டுகள் பூராவும் சமரக்கொடி, பாலா தம்பு மற்றும் சமரக்கொடிக்கு துணையாக இருந்த துல்சிரி அந்திராதி போன்றோரின் அரசியலுக்கு எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செய்தித் தாள்களில் எழுதிய நீண்ட தொடர் கட்டுரைகள் மூலமாக, இலங்கையில் பப்லோவாத அரசியலின் பல்வேறு பிரதிநிதிகளுடன் கட்சி கொண்டிருந்த வேறுபாடுகளை ஆழப்படுத்தினார். சமரக்கொடி, 1968ல் புரட்சிகர ல.ச.ச.க.யில் இருந்து பிரிந்து, தனது மத்தியவாத அரசியலையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கான விரோதத்தையும் பகிர்ந்து கொள்கின்ற ஸ்பாடசிஸ்ட் போக்குடன் சேர்ந்துகொண்டார். இலங்கை வர்த்தக ஊழியர்கள் தொழிற்சங்கத்துக்கு தலைமைவகித்த பாலா தம்புவின் கீழ், புரட்சிகர ல.ச.ச.க. அவரது தொழிற்சங்கத்தின் ஒரு துணைப்பகுதியானதோடு அவரது தொழிற்சங்க வாதத்திற்கு (Syndicalism) ஒரு ஊதுகுழலாகவும் ஆனது. இருந்த போதிலும், 1981 வரை அது தொடர்ந்தும் ஐக்கிய செயலகத்தின் உத்தியோகபூர்வ இலங்கைப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.


[42]

முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் -இடைமருவு வேலைத்திட்டம் (தொழிலாளர் பாதை வெளியீடு), பக்கம். 46.

[43]

கீர்த்தி பாலசூரியா, ஜே.வி.பீ.யின் அரசியலும் வர்க்க சுபாவமும் (சிங்களத்தில்) 1970 டிசம்பர்.

[44]

நான்காம் அகிலம் (சஞ்சிகை) Fourth International, Volume 14, No 1, March 1987, p.