Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சர்வதேச இடது எதிர்ப்பின் ஆரம்பகால போராட்டங்கள்

51. இடது எதிர்ப்பின் நிலைப்பாடுகள் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே நல்ல எதிர்பார்ப்பை பெற்றன. 1928ம் ஆண்டு ஆறாம் காங்கிரசிற்காக ட்ரொட்ஸ்கி தயாரித்த அகிலத்திற்கான வரைவு வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம் அதிருஷ்டவசமாக ஜேம்ஸ் பி. கனனிடம் கிடைத்தது ஒரு பெரிய விஷயமாகும். அந்த ஆவணத்தை படித்தபின் அவரும் கனேடிய புரட்சியாளருமான Maurice Spector உம் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டிற்காக போராட முடிவெடுத்தனர். கனன் அமெரிக்காவிற்கு திரும்பியவுடன் மக்ஸ் சாக்ட்மன், மார்ட்டின் ஏபேர்ன் ஆகியோருடைய ஆதரவுடன் இடது எதிர்ப்பின் நிலைப்பாடுகளுக்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆரம்பித்தார். கனன், சாக்ட்மன் மற்றும் ஏபேர்ன் எழுதிய அறிக்கை 1928 அக்டோபர் 27 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவிடம் அளிக்கப்பட்டது. அது அறிவித்ததாவது:

மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை தனி நாட்டில் சோசலிசம் என்ற போலியான தத்துவத்தின் மூலம் திருத்தும் முயற்சிகள் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் உள்ள எதிர்ப்பினால் சரியாகவே எதிர்க்கப்படுகின்றன. இந்த தவறான தத்துவத்தின் அடிப்படையில் அகிலத்தின் நடவடிக்கையில் பல பகுதிகளிலும் நிறைய திருத்தல்வாத, சந்தர்ப்பவாத தவறுகள் இதில் இருந்து விளைந்துள்ளன. இது ஒரு பகுதியாகவேனும் சீனப் புரட்சியின்போது எடுக்கப்பட்ட தவறான நிலைப்பாடு, பிரிட்டிஷ்-ரஷ்ய குழுவின் படுவீழ்ச்சி, அகிலத்தில் முன்னோடியில்லாத வகையில் வளர்ந்துள்ள அதிகாரத்துவத்தின் வளர்ச்சி, சோவியத் ஒன்றியத்தில் காணப்படும் தவறான அணுகுமுறை கொள்கை ஆகியவை உட்பட இன்னும் பிறவற்றில் இதை காணக்கூடியதாக இருந்திருக்கும். இந்தப் புதிய "தத்துவம்" அதிகாரம் பற்றி அதிகம் வலியுறுத்துகிறது, முதலாளித்துவத்தின் தற்காலிக உறுதித்தன்மை பற்றியும் அதிகம் வலியுறுத்துகிறது. இங்குத்தான் தொழிலாள வர்க்கத்தின் உலகப் புரட்சி வளர்ச்சி பற்றிய அவநம்பிக்கைத்தனத்தின் உண்மையான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த அடிப்படைப் பிரச்சினை பற்றிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோருடைய போதனைகளுக்காக எதிர்ப்புடன் இணைந்து போராடுவது அகிலத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொன்றின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.[32]

52. அரசியல் குழுவின் அதே கூட்டத் தொடரிலேயே கனன் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து Communist League of America என்ற அமைப்பை அவர் நிறுவ முற்பட்டார். இவ்விதத்தில், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு ஆழமான கொள்கை அடித்தளத்தின் தொடக்கமானது பின்பு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் மிக முக்கியமான பங்கையும் வளர்ச்சியையும் கொண்டிருக்கச்செய்தது. அதன் ஆரம்ப புள்ளி அமைப்பு பிரச்சினைகள் பற்றியோ தேசிய தந்திரோபாயங்கள் பற்றிய பூசல் என்றோ இல்லாமல் சர்வதேச புரட்சிகர மூலோபாயம் பற்றிய முக்கியமான பிரச்சினைகளில் சர்ச்சையாக இருந்தது. கனனுக்கு பெரும் ஊக்கம் கொடுத்த ஆவணமான ட்ரொட்ஸ்கியின் வரைவு வேலைத்திட்டம் பற்றிய திறனாய்வு, ஸ்ராலினுடைய தலைமை, 1917 அக்டோபர் புரட்சில் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களை மதிப்பிட அது தவறியது ஆகியவை பற்றிய விரிவான கண்டனம் ஆகும். உலக அரசியல், பொருளாதார நிலைமை பற்றிய அதன் மதிப்பீட்டில், ட்ரொட்ஸ்கி இந்த முன்னோக்கு அமெரிக்க ஏகாதிபத்திய எழுச்சியின் முக்கியத்துவம் பற்றி பகுப்பாய்வு செய்யாததை விமர்சித்தார். தனது மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்ட கொந்தளிப்பான விளைவுகளை பற்றி ட்ரொட்ஸ்கி கடுமையாக வலியுறுத்தினார். அமெரிக்காவில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடும் என்பதைக் முன்கணிப்பீடு செய்யும் அதேவேளையில் அது அமெரிக்காவின் உலக அரசியலில் இருக்கும் மேலாதிக்க நிலையை குறைத்துவிடாது என்றும் அவர் நம்பினார்:

விடயம் எதிர்மாறாகவே இருக்கும். பொருளாதார உயர் ஏற்ற நிலை இருந்த காலத்தைவிட நெருக்கடி காலத்தில் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் முழுமையாக, இன்னும் வெளிப்படையாக, இன்னும் மூர்க்கமான முறையில் செயல்படும் என்றார். எங்கிருந்து அதற்கு இத்தகைய நிலை சம்பவித்தாலும் அதாவது ஆசியா, கனடா, தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் இருந்தே வந்தாலும், அவைகளை யுத்தம் மூலமாகவோ அல்லது சமாதான நிகழ்வினாலோ தன்னுடைய இடர்பாடுகளிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் தன்னை விடுவித்து கடந்து செல்வதற்காக ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பாவின் இழப்பினில் முயற்சிசெய்யும்.[33]

53. 1929 அக்டோபர் மாதம் வோல் ஸ்ட்ரீட் பெரும் சரிவுற்றது முதலாளித்துவத்தை அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய நெருக்கடியில் ஆழ்த்திய உலக பெருமந்த நிலையின் தொடக்கத்தை குறித்தது. முதல் உலகப் போரைக்காட்டிலும் 1930 களின் பெரு மந்தநிலையும் மற்றும் அதில் இருந்து வெளிப்பட்ட குருதிபடிந்த சமூக, அரசியல் எழுச்சிகளும், அனைத்து திருத்தல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் சுயதிருப்தி தீர்வுகள் அனைத்திற்கும் தாக்கமிக்க நிராகரிப்பாக இருந்தது. ஐரோப்பா, ஆசியா ஏன் வட அமெரிக்காவிலும் கூட முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளின் காரணமாக சரிவின் விளிம்பிற்கு கொண்டுவரப்பட்டது. நம்பமுடியாத அளவிற்கு மனித இழப்பில் அது இந்த கொந்தளிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தது என்பது இறுதிப் பகுப்பாய்வில் முதலிலும் முக்கியமான வகையிலும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் தலைமையிலான பரந்த அமைப்புக்களால் தொழிலாள வர்க்கமானது நனவான அரசியல் காட்டிக் கொடுப்பின் விளைவாகவே இருந்தது. இத்தகைய காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியால் தலைமைதாங்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் தான் நான்காம் அகிலம் தோன்றியது. இன்றைய நிலையில் இப்போராட்டங்களின் சான்றுகளும் படிப்பினைகளும் மார்க்சிஸ்ட்டுக்கள் பயிலுவதற்கு முக்கியமான வரலாற்று, தத்துவார்த்த மற்றும் அரசியல் அஸ்திவாரங்களின் அடிப்படைகளை அமைக்கின்றன.

54. 1929ம் ஆண்டு துருக்கிக்கு வந்ததிலிருந்து, திட்டமிட்ட, அறிவார்ந்த தொழில்மயமாக்கல் திட்டத்திற்கு அழைப்பு விடுத்து, சோவியத் ஒன்றியத்தில் சரியான கொள்கைக்காக ட்ரொட்ஸ்கி தொடர்ந்து போராடினார். சர்வதேச இடது எதிர்ப்பின் நோக்கம் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சி அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் கம்யூனிச அகிலம் மார்க்சிச கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சரியான வழிவகைக்கு திரும்பவேண்டும் என்பவைகளாக இருந்தன. 1920 களின் கடைசிப் பகுதியில், நகரங்களுக்கு தானியங்கள் கொடுப்பதை விவசாயிகள் நிறுத்தி வைத்ததானது பெரும் பஞ்சத்தினைத்தான் ஏற்படுத்தியதால், ஸ்ராலினிச அதிகாரத்துவம் விவசாயிகளிடம் முன்பு கொண்டிருந்த சார்புத் தன்மையை மாற்றிக் கொண்டும் சந்தைக் கொள்கைகளை ஊக்கிவித்தும் வளர்த்ததுடன் ஒரு மிருகத்தனமான மற்றும் திட்டமிடப்படாத தொழில்மயமாக்கல் திட்டம், விவசாய கூட்டுறவாக்கம், "வர்க்கம் என்ற முறையில் குலாக்குகளை அழித்தல்" ஆகியவற்றை செய்தது. தேசியவாத பொருளாதார முன்னோக்கு மற்றும் பொருளாதார சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட விரைவில் தொழில்மயப்படுத்த வேண்டும் என்ற அதன் திட்டம், ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்த திட்டமிட்ட அரச தொழில்துறைமயமாக்கல் வளர்ச்சி, சர்வதேச தொழிலாளர் உழைப்புப் பிரிவினை இவற்றுடன் எந்தவித தீவிர தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டுக் கொள்கையில் தீவிர இடதுவாதம் அகிலத்தின் குறுகிய வெறிபிடித்த அரசியல் சாகசச்செயல் வழிவகைதான் "மூன்றாம் காலம்" என்ற தத்துவத்தின் அடிப்படையாக இருந்தது--அதாவது, இன்னும் துல்லியமாகக் கூறவேண்டும் என்றால் தத்துவத்தை எதிர்ப்பதாக மாறியது; இதில் தொடர்ச்சியாக கற்பிதமாக்கப்பட்டு "பரந்துபட்ட மக்கள் தீவிரமயப்படுத்தப்படுவர்" என்றும் அதில் முரண்பாடுகள் ஏதும் இராது என்றும், இது புறநிலை பொருளாதாரம், அரசியல், சமூக நிகழ்வுப்போக்குகளுடன் தொடர்பு அற்று இருக்கும் என்பவைகளாக, இவ் அரசியல் முன்னோக்குத் ‘தத்துவத்தால்’ ஊக்குவிக்கப்பட்டது. அரசியல் மூலோபாயம், தந்திரோபாயங்கள் பற்றிய பிரச்சினைகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் அதாவது தீவிர கோஷங்கள் எளிய கூக்குரலாக குறைக்கப்பட்டது. ஸ்ராலினுடைய கற்பிதக் கொள்கை மார்க்சிச அரசியல் பகுப்பாய்வை ஒரு கேலிக்கூத்து ஆக்கிவிட்டது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். அவர் எழுதியதாவது:

எமது சகாப்தத்தின் கண்ணோட்டத்தின் முழுமையில் தொழிலாள வர்க்க வளர்ச்சி, புரட்சி திசையில்தான் முன்னேறுகிறது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் முதலாளித்துவ முரண்பாடுகளில் ஆழமாயிருக்கும் புறநிலை நிகழ்வுபோக்குகளுக்கு அப்பாற்பட்டு இது ஒரு உறுதியான முன்னேற்றமாக இல்லை. சீர்திருத்தவாதிகள் முதலாளித்துவ பாதையில் இருக்கும் மேடுகளைத்தான் காண்கின்றனர். சம்பிரதாய "புரட்சியாளர்கள்" பள்ளங்களை மட்டும் பார்க்கின்றனர். ஆனால் ஒரு மார்க்சிசவாதி பாதையை முழுமையாகப் பார்க்கிறார், முக்கிய திசையைப் பற்றி ஒரு கணமும் மறக்காமல் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களையும், சந்திப்புக்களையும் - போர்கள் என்ற பேரழிவுகள், புரட்சி என்ற வெடிப்புக்கள் ஆகியவற்றை பார்க்கிறார்.[34]


[32]

James P. Cannon, The Left Opposition in the United States 1928-31 (New York: Monad Press, 1981), p. 32.

[33]

The Third International After Lenin (New York: Pathfinder, 2002), pp. 28-29.

[34]

Writings of Leon Trotsky 1930 (New York: Pathfinder Press, 1975), p. 28.