ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க மாட்டோம் (“இது எங்களது போர் அல்ல”) என்று கடந்த திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த வியாழக்கிழமையன்று, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைக்கப் போவதாக உறுதியளித்து, ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில், 20 நாட்களுக்கு முன்பு சர்வதேச சட்டத்தை மீறி ஈரான் மீது தாக்குதல் நடத்தி, அன்றிலிருந்து இடைவிடாது குண்டுகளை வீசி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, இந்தப் போரில் பாதிக்கப்பட்டவர் மீதே (ஈரான்) குற்றம் சுமத்துவதோடு, ஈரான் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் அறிக்கை கூறுகிறது.
“வளைகுடாவில் ஆயுதமற்ற வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானியப் படைகளால் ஹோர்முஸ் நீரிணையை நடைமுறையில் மூடப்பட்டிருப்பது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்” என்று அந்த கூட்டு அறிக்கை கூறுகிறது. “கடற்பயண சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் ஒரு அடிப்படைக் கொள்கையாகும். ... நீரிணை வழியாகப் பாதுகாப்பான பாதையை உறுதி செய்வதற்கான பொருத்தமான முயற்சிகளில் பங்களிக்க எங்களது தயார்நிலையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். ஆயத்தத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு வெளியுறவு அமைச்சர்கள் நிராகரித்திருந்த போரில், இப்போது அவர்களே பங்கேற்பதற்கான ஒரு அறிவிப்பாகவே இது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்தக் கூட்டு அறிக்கை குறிப்பிட்ட எந்த நடவடிக்கைகளையும் விவரிக்கவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியில் ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ், சண்டை முடிந்த பிறகுதான் நாங்கள் பங்கேற்போம் என்று கூறினாலும், போரின் வேகமான தீவிரம் வேறொரு கதையைச் சொல்கிறது.
கடந்த புதனன்று, உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான “சவுத் பார்ஸ்” (South Pars) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது —இதிலிருந்துதான் ஈரான் தனது இயற்கை எரிவாயு விநியோகத்தில் 70 சதவீதத்தைப் பெறுகிறது— இதனைத் தொடர்ந்து கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களை நியாயமான இலக்குகள் என்று ஈரான் அறிவித்தது.
ஈரானிய ஏவுகணைகள் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆலையான ராஸ் லாஃபானுக்கு (Ras Laffan) கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. அந்த ஆலையின் 17 சதவீதத் திறன் அழிக்கப்பட்டது, இதனைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம். குவைத்தில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சவுதி அரேபியாவின் யான்புவில் (Yanbu) உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டன. செங்கடலில் அமைந்துள்ள யான்பு, எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் நீரிணையை நம்பியிருக்காத ஒரே சவுதி துறைமுகமாகும். இந்தத் தீவிரமான போரின் விளைவாக, உலகச் சந்தையில் எரிவாயு விலை 35 சதவீதமும், எண்ணெய்யின் விலை 7 சதவீதமும் உயர்ந்து ஒரு பீப்பாய் 115 டாலராக அதிகரித்தது.
ஈரான் மீதான போரில் ஈடுபடுவதை ஐரோப்பிய வல்லரசுகள் ஆரம்பத்திலிருந்தே அடிப்படை ரீதியாக எதிர்க்கவில்லை என்பதையும், தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரிப்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், அவர்கள் அமெரிக்காவிற்கு அடிபணிந்து போவதற்கும், எதன் போக்கின் மீது தங்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லையோ மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரு பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவில் முடியுமோ அத்தகைய ஒரு போரில் பங்கேற்பதற்கும் தயாராக இல்லை.
சான்சிலர் மெர்ஸ், ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்சிமாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்பு, புதனன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அரசு உரையில் இதனை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார். அவர், அமெரிக்காவிற்கு மாறாக ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் வல்லரசு அந்தஸ்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் தனது உரையைத் தொடங்கினார்.
“450 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் —இது அமெரிக்காவை விட 100 மில்லியன் அதிகம்— இனி எங்களை நாங்களே குறைத்து மதிப்பிட விரும்பவில்லை” என்று அவர் கூறினார். “எங்கள் நலன்களை நாங்கள் அடையாளம் காண்கிறோம், அதே நேரத்தில் இந்த நலன்களைச் செயல்படுத்துவதற்கான அதிகார வழிமுறைகளையும் அடையாளம் காண்கிறோம். நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்: மற்றவர்களும் நம்மைச் சார்ந்துள்ளனர், நாம் மட்டும் அவர்களைச் சார்ந்திருக்கவில்லை. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும், உண்மையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்” என்று மெர்ஸ் தெரிவித்தார்.
துல்லியமாக இந்த “நலன்கள்” தான் —அதாவது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்கள்— இப்போது மெர்ஸ் மீண்டும் “அதிகார வழிமுறைகள்” மூலம், அதாவது இராணுவ வலிமை மூலம் செயல்படுத்த முயல்கிறார். இது ஜேர்மனியையும் ஐரோப்பாவையும் ஒரு போரின் சுழலுக்குள் ஆழமாக இழுத்துச் செல்கிறது. இது சமூக மற்றும் அரசியல் பேரழிவில்தான் முடியும்.
ஈரானுக்கு எதிரான கொடூரமான ஆக்கிரமிப்புப் போர், ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச யுத்த அமைச்சர் ஹெக்செத்தின் சிதைந்த மூளையிலிருந்து மட்டும் உதிக்கவில்லை. இது, இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அமெரிக்கா மேற்கொண்டு வரும் 35 ஆண்டுகால முயற்சிகளின் உச்சக்கட்டமாகும். இந்தப் போர், மத்திய கிழக்கின் பெரும்பகுதியை அழித்துள்ளதோடு, குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இருவராலும் ஆதரிக்கப்படுகிறது.
1953-ல் வாஷிங்டன் ஒரு சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்குக் கொண்டு வர உதவிய ஷாவின் (Shah) கொடூரமான மற்றும் சித்திரவதைகள் நிறைந்த ஆட்சியின் போது — மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக முக்கியமான கோட்டையாக ஈரான் இருந்தது. 1979 புரட்சிக்குப் பிறகுதான் அந்த இடத்திற்குப் பதிலாக இஸ்ரேல் வந்தது. அந்தப் புரட்சிக்காக ஈரானிய மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் மன்னிக்கவில்லை.
கடந்த 120 ஆண்டுகாலமாக பெற்றுவந்த அனைத்து முன்னேற்றங்களையும் —அதாவது தொழிலாள வர்க்கத்தின் சமூக முன்னேற்றங்கள் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவுகள் ஆகியவற்றை தகர்க்க இப்போது ட்ரம்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்று வருகிறது. ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பில்லியன் டாலர்களைக் கொண்டிருக்கின்ற தன்னலக்குழு, உலகை மீண்டும் 19-ஆம் நூற்றாண்டின் காலனித்துவ நிலைக்கும், எல்லையற்ற சுரண்டலுக்கும் தள்ள முயல்கிறது. ட்ரம்ப் ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்கா, கியூபா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உரிமை கோருகிறார், மேலும் சீனாவிற்கு எதிரான போருக்கும் தயாராகி வருகிறார்.
ஏற்கனவே இருமுறை உலகைப் பேரழிவிற்குள் தள்ளிய ஜேர்மன் ஏகாதிபத்தியம், இதில் சும்மா இருக்கப் போவதில்லை. சேர்பியா மீதான மோதலுடன் தொடங்கி, 40 நாடுகள் மற்றும் சுமார் 70 மில்லியன் சிப்பாய்களை உள்ளடக்கிய உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஒரு கொடூரமான போராட்டமாக உருவெடுத்த முதலாம் உலகப் போரைப் போலவே, ஈரான் மீதான இந்தப் போரும் ஒரு உலகளாவிய பேரழிவாக மாறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மெர்ஸ் போர்வெறியர்களுடன் பகிரங்கமாகத் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். “எதிர்காலத்தில் ஈரான் இனி ஒரு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்ற இலக்கை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஜேர்மன் அரசாங்கம் பகிர்ந்து கொள்கிறது” என்று அவர் அறிவித்தார். “இந்த இராணுவ நடவடிக்கை எவ்வாறு வெற்றிபெறும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு உறுதியான திட்டமும் அவரிடம் இல்லை” என்ற அடிப்படையில் போரில் பங்கேற்பதை அவர் நிராகரித்தார். இருப்பினும், போர் மேலும் தீவிரமடைந்தால் அதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இது நிராகரிக்கவில்லை.
உக்ரேன் போருக்கு ஜேர்மனி சுமார் 100 பில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்கியதற்கு, நான்கு ஆண்டுகளாக சர்வதேச சட்ட மீறல் என்ற காரணமே முன்வைக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே சர்வதேச சட்டம் காலால் மிதிக்கப்படுகிறது. ஈரான் மீதான போர் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது —அதாவது இந்தப் போர், ஒரு போர்க் குற்றம் என்பதில் தீவிரமான சட்ட வல்லுநர்களிடையே எந்த சந்தேகமும் இல்லை.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 95 ஜேர்மன் சட்டப் பேராசிரியர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், “சர்வதேச சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தெளிவான கண்டனத்தை வெளியிடத் தவறியதன் மூலம், ஐரோப்பாவிலும், உலகிலும் விதிகள் சார்ந்த மற்றும் நிறுவன ரீதியான ஒழுங்குமுறை மேலும் சிதைவதற்கு ஜேர்மன் அரசாங்கம் பங்களிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரான் மீது இராணுவ வலிமையைப் பயன்படுத்துவது ஏன் “சர்வதேச சட்டத்தின் கீழ் பலத்தைப் பயன்படுத்துவதற்கான தடையை மீறுவதாகும்” என்பதை சட்ட வல்லுநர்கள் விரிவாக விளக்குகிறார்கள்.
வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டுக் கொள்கையிலிருந்து பிரிக்க முடியாது. தங்களது ஏகாதிபத்திய நலன்களுக்குத் தடையாக இருக்கும்போது சர்வதேச சட்டத்தை ஆட்சியில் இருப்பவர்கள் எந்தக் கொடூரத்துடன் மீறுகிறார்களோ, அதேபோல் அவர்களது போர்க் கொள்கைகள் மற்றும் சமூகச் செலவினக் குறைப்புகளுக்கு எதிரான உள் நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பும்போது அவர்கள் ஜனநாயக உரிமைகளை அலட்சியப்படுத்துவார்கள்.
