Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்சரிவு

14-1. லங்கா சமசமாஜக் கட்சி 1953ன் பின்னர் துரிதமாக சீரழிந்தது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பப்லோவாத சர்வதேச செயலகம் அதற்கு உதவியும் ஊக்குவிப்பும் கொடுத்தது. ஒரு தசாப்தத்துக்கு சற்று அதிகமான கால இடைவெளியில், கட்சி ட்ரொட்ஸ்கிசத்துக்கான எந்தவொரு போராட்டத்தையும் கைவிட்டு, சிங்கள இனவாதத்தை தழுவிக்கொண்டதோடு 1964ல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதன் மூலம் முதலாளித்துவ அரசினை நிர்வாகம் செய்கின்ற அரசியல் பொறுப்பையும் ஏற்று தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் சீரழிவு ஒவ்வொரு கட்டத்திலும் பண்டாரநாயக்காவுக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் - அதாவது குறைந்தபட்சம் ஆரம்பக் கட்டத்திலேனும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு சாயம் பூசிக்கொண்டு சோசலிச வாய்ச்சவாடல்களை விடுத்துக்கொண்டிருந்த சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் இனவாத அரசியலுக்கு - அரசியல் ரீதியில் இணங்கிப் போவதுடன் நெருக்கமாகக் கட்டுண்டிருந்தது. ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு எதிராக ஒரு உறுதியான, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை லங்கா சமசமாஜக் கட்சி எடுக்க முடியாமல் இருந்தமை, அது சமசமாஜவாதத்தின் குட்டி முதலாளித்துவ தீவிரவாத பாரம்பரியங்களுக்கு மீண்டும் திரும்பியதுடன் தொடர்புபட்டிருந்தது. அது அரசியல் ரீதியில் ஒரே இயல்புடைய கட்சியாக இனியும் இருக்கவில்லை. முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த பகுதியினர் தொடர்ந்தும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் காலூன்றி இருந்தனர் என்பது 1948ல் புதிய “சுதந்திர” அரசு என்ற மோசடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரமாண்டமான கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆயினும், என்.எம். பெரேரா தலைமையிலான கட்சியின் வலதுசாரிக் குழு, அதிகரித்துச் சென்ற தேசியவாத நோக்குநிலையைத் தீர்மானித்தது, இதற்கு முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பெரும் உருவங்களாக திகழ்ந்த கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தனா போன்றோர் எதிர்ப்புகாட்டாமல் இணங்கி விட்டிருந்தனர். இவ்வாறு என்.எம். பெரேரா ஸ்ரீ.ல.சு.கட்சியையும் மற்றும் அதன் சிங்கள ஜனரஞ்சகவாதத்தையும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு கட்சியினுள் இருந்த எதிர்ப்பை படிப்படியாக தோற்கடித்தார்.

14-2. 1956 தேர்தலுக்கான தயாரிப்பில், பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் தாம் ஓரங்கட்டப்பட்டிருந்ததையிட்டு வெறுப்படைந்திருந்த சிறு வர்த்தகர்கள், புத்த பிக்குகள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் போன்ற சிங்கள குட்டி முதலாளித்துவ தட்டினரை அணிதிரட்டிக்கொள்ள பண்டாரநாயக்கா முயற்சித்தார். முன்னைய புத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் உணர்ச்சி ததும்பும் பேச்சினை பற்றிக் கொண்ட பண்டாரநாயக்கா, சிங்களவர்கள் “ஒரு தனித்துவமிக்க இனம்”, அதற்கு நாட்டின் விவகாரங்களில் மேலாதிக்க நிலை கொடுக்கப்பட வேண்டும், என வாதிட்டார். 1955ல் ஆங்கிலத்துக்குப் பதிலாக நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தையும் தமிழையும் பதிலீடு செய்யும் தனது கொள்கையை ஸ்ரீ.ல.சு.க. கைவிட்டது. அதற்கு மாறாக அது, சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதாவது நீதிமன்றங்கள், பொதுத்துறை வேலைகள், கல்வி அமைப்பு மற்றும் சகல உத்தியோகபூர்வ விவகாரங்களிலும் சிங்களம் மட்டுமே பயன்படுத்தப்படும். புத்த மதத்துக்கு ஒரு விசேட உத்தியோகபூர்வ நிலையை வழங்குவதாகவும் பண்டாரநாயக்கா வாக்குறுதியளித்தார். அரச கொள்கைகளை வழிநடத்தும் ஒழுக்கமுறையாக சிங்கள மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முன்மொழிந்ததன் மூலம், ஸ்ரீ.ல.சு.கட்சி தமிழ் இன மக்களையும் மற்றும் தமிழ்-பேசும் முஸ்லிம்களையும் இரண்டாந்தர பிரஜைகளாக்கியது. தனது சிங்கள ஜனரஞ்சகவாதத்தை சோசலிச மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வார்த்தைகளால் அலங்கரிப்பதற்காக, பண்டாரநாயக்கா 1956 தேர்தலில் பிலிப் குணவர்த்தனாவின் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியையும் தனது மக்கள் ஐக்கிய முன்னணிக்குள் (Mahajana Eksath Peramuna -MEP) கொண்டுவந்தார்.

14.3. லங்கா சம சமாஜக் கட்சி சிங்களம் மட்டும் என்ற கொள்கையை எதிர்த்ததோடு சிங்கள இனவாதிகள் வன்முறைத் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தது. ஆயினும், லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களின் வாதங்கள், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் இருந்து வேறுபடுவதை தெளிவாகக் காட்டின. லங்கா சம சமாஜக் கட்சி இலங்கை அரசுக்கான அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, சிங்களம் மட்டும் கொள்கை தேசத்தைக் கீழறுக்கும் எனவும் வாதிட்டது. அவர்களது எதிர்ப்பு தேசத்தின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்ததே அன்றி தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. 1955 அக்டோபரில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய என்.எம். பெரேரா எச்சரித்ததாவது: “நாம் நாட்டில் ஒரு நிலையான பிளவைக் கொண்டிருப்போம், நமக்கு ஒரு ஐக்கிய இலங்கை கிடைக்காது, மற்றும் நம்மை மிகவும் பின்னால் தள்ளிவிடும் ஒரு பயங்கர அளவிலான இரத்தக்களரி பெருக்கெடுக்கும், மற்றும் முடிவில், இந்த நாடு பெரும் வல்லரசுகளின் நலன்களுக்கான ஒரு காலனியாகும் அல்லது ஒரு விளையாட்டுப் பொருளாகும்.” [30] இந்த நிலைப்பாடு கோட்பாடு அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” கொள்கையைக் கொண்டிருந்த போதும், லங்கா சம சமாஜக் கட்சி தேர்தலில் “போட்டித்தவிர்ப்பு” உடன்படிக்கை ஒன்றை ஸ்ரீ.ல.சு.கட்சியுடன் கையெழுத்திட்டது. அதன் மூலம், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடு என்ற நம்பகத்தன்மையை முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க.க்கு அது கொடுத்தது. ஸ்ரீ.ல.சு.க. மாபெரும் வெற்றியைப் பெற்ற பின்னர், லங்கா சம சமாஜக் கட்சி பண்டாரநாயக்கா அரசாங்கம் சம்பந்தமாக “பிரதியுபகாரமான ஒத்துழைப்பு” என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்ததோடு 1956 மற்றும் 1957ல், ஆண்டுக்கான அரசாங்க கொள்கையை விவரிக்கும் அரியாசன உரைக்கு (Throne Speech) வாக்களித்தது. 1957 கடைப் பகுதியில் வேலைநிறுத்தங்கள் வெடித்த பின்னரே பண்டாரநாயக்காவை விமர்சிக்கத் தொடங்கியது.

14-4. சகல பகுதிகளிலும் சிங்கள மேலாதிக்கத்தை வலியுறுத்துவதே ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் உந்துதலாக இருந்தது. அது தமிழர்களின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டதோடு தமிழ் தட்டுக்களுடன் சமரசத்துக்காக பண்டாரநாயக்காவின் பக்கமிருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் ஒரு காட்டிக்கொடுப்பாகக் கருதிய சிங்கள அதிதீவிரவாதிகளின் திட்டமிட்ட எதிர்-படுகொலைகளையும் தூண்டிவிட்டது. அவரது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தேசியமயமாக்கல் நடவடிக்கைகள், அரசின் பாத்திரத்தை விரிவாக்கியதோடு அதன் மூலம் சிங்களப் பெரும்பான்மையினருக்கு தொழில் வாய்ப்புக்களையும் கொடுத்தது. இது, பொதுக் கல்வியையும் பொது சுகாதார சேவையையும் விரிவாக்கியதோடு, கட்சியின் சிங்கள கிராமப்புற வாக்காளர் மத்தியில் ஆதரவைப் பலப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருந்தது. ஆனாலும், அரசாங்கம் தொழிலாளர்களின் மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை இட்டுநிரப்ப இலாயக்கற்றிருந்தமை வேலை நிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வழிவகுத்தது. 1958ல் பொதுஜன பாகாப்புச் சட்டத்தை (Public Security Act) பலப்படுத்தி, அதையடுத்து பத்து மாதங்களுக்கு அவசரகால நிலையை அமுல்படுத்தியதில் அதன் தொழிலாள வர்க்க விரோத பண்பு வெளிப்படையானது. ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கிராமப்புறத்தில் ஒரு தளத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் சிங்கள இனவாத அரசியலை சுரண்டிக் கொண்ட பண்டாரநாயக்கா, தனது சொந்த உருவாக்கத்துக்கே பலியானார். அவர் 1959 செப்டெம்பரில் ஒரு புத்த அதிதீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்டார். அரசாங்கம் வளர்ச்சியடைந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டுப்படுத்த இலாயக்கற்றது என பீதியடைந்த, அவரது சொந்தக் கட்சிக்குள்ளிருந்த வலதுசாரிகளும் கூட இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. பிலிப் குணவர்த்தனாவை அரசாங்க அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலக்க வேண்டும் என இதே வலதுசாரி குழு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. பிலிப் குணவர்த்தனா தனது சொந்த புதிய சிங்கள இனவாதக் கட்சி உருவாக்கத்திற்காக மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) என்ற பெயரை எடுத்துக்கொண்டார்.

14-5. 1960ம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி மேலும் வலது பக்கம் நகர்ந்ததை குறித்தது. மார்ச்சில் நடந்த முதல் இரு தேர்தல்களில், புரட்சிகர மார்க்சிசத்தின் எந்தவொரு வெளித்தோற்றத்தையும் காட்டாது கைவிட்ட லங்கா சம சமாஜக் கட்சி, சோசலிசத்துக்கு பாராளுமன்ற பாதையைத் தழுவிக்கொண்டது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சி முழுமையாக மதிப்பிழந்துவிட்டதாக பிரகடனம் செய்த கட்சி பாராளுமன்றத்தின் மூலமாக “ஒரு சமசமாஜவாத அரசாங்கத்துக்காக”ப் பிரச்சாரம் செய்தது. மொழிப் பிரச்சினையில் தனது முன்னைய நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வங்காட்டாத அது, சிங்களம் மற்றும் தமிழுக்கு சமநிலை வேண்டும் என அதுவே முதலில் விடுத்த அழைப்பை கைவிட்டது. மற்றும் பிரஜா உரிமை சம்பந்தமாகவும், அது இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பெயர் குறிப்பிடாமல், அந்த விவகாரம் தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனப் பிரகடனம் செய்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் பாராளுமன்ற கோணல் நடவடிக்கைகளையும் அது இனவாத அரசியலுக்கு அடிபணிந்ததையும் உத்வேகத்துடன் அங்கீகரித்த பப்லோவாத சர்வதேசச் செயலகம், அதன் தேர்தல் பிரச்சாரத்தை “அதிகாரத்துக்கான ஒரு தீர்க்கமான போராட்டம்” என விவரித்தது.

14-6. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி 1956 தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட குறைவான ஆசனங்களையே பெற்றமை, கட்சிக்குள் நெருக்கடியை தூண்டிவிட்டது. முதல் தடவையாக, கட்சி ஸ்ரீ.ல.சு.க. உடன் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு தயாராக வேண்டும் என முன்மொழிவதற்கு அந்த சந்தர்ப்பத்தை என்.எம். பெரேரா பற்றிக்கொண்டார். 1960 மே மாதம் நடந்த கட்சி மாநாட்டில் அவரது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவரது வலதுசாரிக் குழுவினர் சிறுபான்மையாக இருந்த கட்சியின் மத்திய குழுவின் வாக்கெடுப்பில் அது தோற்கடிக்கப்பட்டது. எனினும், குறுகியகாலம் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கவிழ்ந்ததோடு, 1960 ஜூலையில் நடந்த புதிய தேர்தலில், ஸ்ரீ.ல.சு.கட்சி உடன் லங்கா சமசமாஜக் கட்சி ஒரு போட்டித்தவிர்ப்பு உடன்படிக்கையை செய்துகொண்டது. பண்டாரநாயக்காவின் விதவை மனைவியின் தலைமையில் புதிய ஸ்ரீ.ல.சு.கட்சி அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டவுடன், அதன் அரியாசன உரை மற்றும் முதலாவது வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களித்ததன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி அதன் ஒட்டு மொத்த கொள்கைகளுக்கும் ஆதரவளித்தது.

14-7. இதன் பின்னரே பப்லோவாத சர்வதேச செயலகம் அரைகுறையான விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியது. அது 1956ல் லங்கா சம சமாஜக் கட்சியின் முன்னைய “போட்டித்தவிர்ப்பு” உடன்படிக்கையையோ ஸ்ரீ.ல.சு.கட்சி உடனான “அனுகூலமான ஒத்துழைப்பையோ” எதிர்க்கவில்லை. 1960ல் லங்கா சமசமாஜக் கட்சி யின் சோசலிசத்துக்கான பாராளுமன்ற பாதை பற்றிய சர்வதேசச் செயலகத்தின் விமர்சனம், அது தேர்தலில் வெற்றி பெறாததைப் பற்றியதாகவும் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு “ஆழமான ஆய்வுகள்” அவசியம் என்று கூறுவதாகவுமே இருந்தது. எவ்வாறெனினும், ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைவது பற்றி என்.எம். பெரேரா யோசனை அளித்தவுடன், சர்வதேசச் செயலகமானது தனது சொந்த கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அரசியல் மூடுதிரையை வழங்கத் தொடங்கியது. “போட்டித்தவிர்ப்பு-உடன்படிக்கை”யானது “வெகுஜனங்கள் மத்தியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் குணநலன் பற்றி மாயைகளை உருவாக்கும்” ஆபத்தைக் கொண்டிருந்தது என அது காலங்கடந்து அறிவித்தது. அரியாசன உரைக்கும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கும் லங்கா சமசமாஜக் கட்சி ஆதரவளித்ததை ஆறாவது உலக மாநாடு கண்டனம் செய்தது. ஆனால், “தொழிலாள வர்க்கம் சாராத அரசாங்கத்துக்கு (அது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும் சரி முதலாளித்துவ வர்க்கமாக இருந்தாலும் சரி) விமர்சனத்துடன் ஆதரவளிப்பதை” சர்வதேசச் செயலகம் நிராகரிக்கவில்லை, மற்றும் அவ்வாறு செய்ததன் மூலம் அது லங்கா சமசமாஜக் கட்சியின் வலது பக்கமான நகர்வை அங்கீகரித்து அதன் சந்தர்ப்பவாதம் தொடர்வது நியாயப்படுத்தப்பட வழிவகை வழங்கியது.

14-8. சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிந்ததற்கும் பப்லோவாதம் ஒப்புதலளித்தது. 1956ல் ஹங்கேரிய எழுச்சியின் தோற்றத்துடன், 1957ல் எட்மன்ட் சமரக்கொடி மற்றும் கொல்வின் ஆர் டி. சில்வா உட்பட லங்கா சமசமாஜக் கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விருந்தினர்களாக மாஸ்கோவுக்கு சென்றிருந்ததோடு சோவியத் இராணுவம் ஹங்கேரியத் தொழிலாளர்களை நசுக்கியதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதே ஆண்டு, “சூ என் லாய்க்கு புகழாரம்” என்ற தலைப்பில் லங்கா சமசமாஜக் கட்சி செய்தித் தாள் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்ததோடு சீன வெளியுறவு அமைச்சரையும் அவரது சக ஸ்ராலினிஸ்டுகளையும், “சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் செய்த மிகப்பெரும் அர்ப்பணிப்புக்காக”ப் பாராட்டியது. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்றில் லங்கா சம சமாஜக் கட்சியை விமர்சித்திருந்தது. “சூ என் லாயும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை’ அல்லது அந்த வெற்றியுடன் அவர்களை முறையாக அடையாளங்காண முடியாது”, என அது தெரிவித்தது. சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை விடுவிப்பதற்கு வலுவான கோரிக்கை வைக்குமாறு அது சீனாவுக்கு செல்லவிருந்த லங்கா சம சமாஜக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் அவ்வாறு செய்ய திட்டவட்டமாக மறுத்தனர்.


[30]

[Blows against the Empire, பக்.169]